கிளிநொச்சி கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் முறைப்பாடு
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமன்றி புதிய ஆசிரிய நியமனங்களின் போது தங்கள் பாடசாலை புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றான சாந்தபுரம் கிராமத்தில் தரம் 11 வரை வகுப்புக்கள் காணப்படுகின்றன. இங்கு நீண்ட காலமாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது.
புதிதாக மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்ற போதும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் புறக்கணிப்பட்டு வருகிறது.
பாவனையில்லா கணினி வகுப்பறை
தகவல் தொழிநுட்ப பாடத்திற்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 20 புதிய கணிணிகள் கொண்டுள்ள கணினி வகுப்பறை பயன்பாடின்றி காணப்படுகிறது.
அத்தோடு கணிதம், வரலாறு, உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு ஆசியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது கல்வியல் கல்லூரியில் இருந்து ஆசிரிய நியமனம் பெற்று நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வருகை தந்த போதும் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்கு ஒருவரும் நியமிக்கப்படவில்லை என பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜனை
தொடர்பு கொண்டு வினவிய போது,
தற்போது கல்வியற் கல்லூரியிலிருந்து 50
ஆசிரியர்கள் வலயத்திற்கு அனுப்பட்ட நிலையில் அதில் அரைவாசி பேர் கடமைகளை
பொறுப்பேற்றுள்ளனர்.
எனவே ஏனையவர்களும் கடமைக்கு வருகின்ற போது இந்த பாடசாலைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




