கிராம அலுவலர் மீதான தாக்குதல்.. ஆட்பிணையில் சென்ற இளங்குமரன் எம்பி
கிளிநொச்சி - பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தாக்கியமை தொடர்பான வழக்கு இன்று (20.01.2026) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி வெள்ள அனர்த்தத்தின் போது இடம்பெயர்ந்து பரந்தன் இந்து ம.வி நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை பராமரித்துக் கொண்டிருந்த அப்பகுதி கிராம அலுவலர் மீது இளங்குமரன் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆட்பிணை
இதன்போது கிராம அலுவலர் சார்பாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். குறித்த வழக்கானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த 16ஆம் திகதி குறித்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மன்றில் முன்னிலையாகவில்லை. இந்நிலையில், இன்றைய தினம் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இருப்பினும், இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இருப்பதனால் அதில் கலந்து கொள்வதற்காக இளங்குமரன் நேற்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஒன்றிணை தாக்கல் செய்து மன்றில் முன்னிலையாகி ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri