கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிஸார் தீவிர விசாரணை
கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் இன்று மாலை குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 42 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம் கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு நபர்களிற்கிடையில் முரண்பாடு காணப்பட்ட நிலையில் வீதியால் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன சத்தம் என வினவியுள்ளார்.
இதன்போது குறித்த நபர் மீது மற்றைய நபர் தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதல் மேற்கொண்டவர் மது போதையிலிருந்ததாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனை அடுத்துத் தாக்குதலிற்குள்ளான நபரைக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது எனத் தெரிவித்து மீண்டும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சடலம் இன்று மாலை குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான
விசாரணைகளைக் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.