ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.
இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாககின்றது.
ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்று (8) அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது.
தோல்வி
இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறைக்கு சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.

வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.
பாதீட்டை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.
வாக்கெடுப்பு
குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.
இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியானது, 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.
இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பியின் 04 வாக்குகளும், என்.பி.பியின் 03 வாக்குகளும், தமிழரசு கட்சியின் ஒரு வாக்கும் பதியப்பட்டன.
உள்ளூராட்சி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


