இணைய வசதிகள் முடக்கப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் அபாயம் (VIDEO)
இலங்கையில் இன்னும் இரண்டு,மூன்று நாட்களில் இணைய வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையமும் மூடப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு நிதி நெருக்கடிக்கு மத்தியில் கையாளும் பல்வேறு தரப்பிலான உபாயங்கள் குறித்து எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தை தற்போது இயற்கையும் தண்டிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது,தற்போது நீரினையும் சேமிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 40 சதவீதமான மின்சார உற்பத்தியை செய்யக்கூடிய நிலையில் கூட இலங்கை இல்லை.
இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் இலங்கையில் தற்போது பயன்பாட்டிலுள்ள 3G,4G ,இணைய வசதிகள் கூட இன்னும் இரண்டு,மூன்று நாட்களில் முடங்கும் அபாயம் உள்ளது.
இதேவேளை,தற்போது அதிகளவு சுற்றுலா சென்றுள்ள புலம்பெயர் மக்கள் மீண்டும் தங்களது நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையேற்பட்டுள்ளது.
மேலும் ,மின்வெட்டு பிரச்சினை,எரிப்பொருள் பிரச்சினை,ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத பிரச்சினை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையம் கூட மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.