ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கட்டைக்காட்டு கப்பலேந்தி மாதா ஆலய திருவிழா
கட்டைக்காட்டு புனித கப்பலேந்தி மாதாவின் திருத்தலத்தின் மாபெரும் திருவிழாவான ஆவணி மாத திருவிழா இன்று (15) ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடுவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பங்கின் வரலாற்று சிறப்புமிக்க கப்பலேந்தி மாதாவின் ஆலய திருவிழா இன்று காலை 5:30 மணியளவில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி, புதிதாக நிறுவப்பட்ட கப்பலேந்தி மாதாவின் திருச்சொரூவ ஆசிர்வாதத்துடன் திருவிழா திருப்பலியானது 6:30 மணியளவில் ஆரம்பமானது.
திருவிழா திருப்பலி
இத்திருவிழா திருப்பலியானது கட்டைக்காட்டு பங்கு தந்தை வனபிதா அமல்ராஜ் தலைமையில் ஆரம்பமாகி அருட்தந்தை றமேஸ் அடிகளார் மற்றும் ஜஸ்டின் ஆதர் செம்பியன்பற்று பங்கு தந்தை மற்றும் போல்ஜெயந்தன் பச்செக் அமலமரித்தியாகிகள், யாழ். மாகாண முதல்வ இணைந்து கூட்டுத் திருப்பலியாக திருவிழா திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து புனித கப்பலேந்தி மாதாவின் திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து கப்பலேந்தி மாதாவின் ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் மற்றும் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இம்மாதம் முதலாம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து 6ம் திகதி நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று நேற்றைய தினம் நற்கருணை திருவிழா திருப்பலியானது அருட்தந்தை அமல்ராஜ் தலைமையில், அருட்தந்தை அன்ரனி பெனாண்டோ அடிகளரால் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




