செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்(Video)
இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாதயாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் ஆரம்பித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த பாதயாத்திரையானது இன்று (06.05.2023) முதல் ஆரம்பமாகியுள்ளது.
பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரை குழுத்தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவித்துள்ளார்.
விசேட பூஜைகள்
கடந்த 23வருடங்களாக சைவ மரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப்பாதயாத்திரை கதிர்காம கந்தனாலய கொடியேற்ற தினத்தில் கதிர்காமத்தை சென்றடைவது வழமையாகும்.
இதன்போது காலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து மோகன்சு வாமியால், வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரை குழுத்தலைவர் ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதுடன் பாதயாத்திரைகள் ஆரம்பமாகியுள்ளது.
முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை அடைந்த பின்னர் அங்கிருந்து வழமையாக பயணிக்கும் நூறு பக்தர்களுடன் பாதயாத்திரை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் இன்று நடைபெறவிருக்கிறது.
உற்சவ இறுதி முடிவுகள்
கடந்த வருடம் ஜெயாவேல்சாமி தலைமையில் 7மாவட்டங்களையும் இணைத்து 46நாட்களில் 98ஆலயங்களைத் தரிசித்து 815 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடக்கும் இப் பாதயாத்திரை இலங்கையின் மிக நீண்ட தூர கதிர்காம பாத யாத்திரையாக கருதப்படுகின்றது.
எதிர்வரும் ஜீன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெறுவதையடுத்து ஜீலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
மேலும், மொனராகல மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெறவிருக்கும் முக்கிய கூட்டத்தில் உற்சவம் தொடர்பான இறுதி முடிவுகள் மற்றும் காட்டுப்பாதை திறப்பு உற்சவ காலம் பெரஹரா தொடர்பிலான இறுதிக்கட்ட தீர்மானங்கள் தீர்மானிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.



