திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - திருகோணமலை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (பெப்ரவரி 9) உத்தரவிட்டது.
நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மறுப்புத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். கடந்த 2025 நவம்பர் 16ஆம் திகதி, திருகோணமலை கடற்கரை ஓரத்தில் கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான நிலத்தில், எவ்வித சட்டபூர்வ அனுமதியுமின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பாதிப்பதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய விசாரணையை முன்னிட்டு நீதிமன்றச் சூழலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
செய்தி - கியாஸ் ஷாபி
இரண்டாம் இணைப்பு
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பத்து பேரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத்துறை தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ப தேரர் உள்ளிட்டோர் இன்று (09.02.2026) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையின் விகாராதிபதி பலாங்கொட கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், திருகோணமலை சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் உட்பட 10 பேர் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருகோணமலை கடலோர பாதுகாப்பு மண்டலத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத்துறை தாக்கல் செய்த முறைப்பாட்டின் பேரில் இந்த வழக்கு தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு மேலதிக செய்தி - ரொசான்



