வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் கோவிலின் 24ஆவது மகோற்சவப் பெருவிழா
லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் கோவில் 24ஆவது மகோற்சவப் பெருவிழா 11-08-2025 திங்கள்கிழமை முதல் 27-08-2025 புதன்கிழமை வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த ஆலயம் தொடங்கி இரண்டு கும்பாபிஷேகங்கள் நிறைவேறி பல உற்சவங்கள் விழாக்கள் விரதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஆலயத்தில் பல அடியார்கள் வந்து தமது பிரார்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மாதந்தோறும் சதுர்த்தி சங்கடகர சதுர்த்தி, பிரதோஷம் காயத்திரி உற்சவம் மற்றும் வசந்த நவராத்திரி, தீபதுர்கா ஹோமம், அம்மன் இலட்சார்ச்சனை, பிள்ளையார் கதை போன்ற பல விழாக்களுடன் பொதுவான விழாக்களும் நடைபெற்று வருகின்றன.
ஆன்மீக உரைகள்
ஆலயத்தில் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் பகலில் மூத்தோர் ஒன்று கூடலும் மாலை நேரத்தில் இளையோரின் பண்ணிசை வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.
அத்துடன் விழாக்காலங்களில் இளையோர்களின் பண்ணிசை சமய சிந்தனை என்பனவும் நடைபெற்று வருகிறது. பல்வேறு சந்தர்ப்பங்களில் கலைநிகழ்வுகள் இடம்பெறும்.
இதனால் இளையோரின் ஆலய வருகை மற்றும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கிறது. ஆலய விழாக்காலங்களில் பல்வேறு சொற்பொழிவாளர்கள் தமிழகத்திலும் இலங்கையில் இருந்தும் வருகை தந்து ஆன்மீக உரைகள் ஆற்றியுள்ளனர்.
இதேபோன்று தவில் நாதஸ்வர இசைக்கலைஞர்களும் தமிழகம் மற்றும் தாயகத்தில் இருந்து வந்து கலந்து கொண்டுள்ளனர். இம்முறையும் தமிழகத்தில் இருந்து சுமதிஸ்ரீயின் சொற்பொழிவு முதல் மூன்று தினங்களும் சுவாமி வீதி உலா நிறைவடைந்ததும் நடைபெற உள்ளது.
எல்லா நாட்களிலும் மங்கள இசை விசேடமாக நடைபெற உள்ளது. ஆலய நாதஸ்வர வித்துவான் இரா.மணிகண்டன் தமிழகத்தில் இருந்து வந்த தவில் வித்துவான் இரா.சண்முகம் இவர்களுடன் தாயக வித்துவான்கள், நாதஸ்வர மேதைகள் குமரன் பஞ்ச மூர்த்தி பாலமுருகன் நாதஸ்வர வித்துவான் பிருந்தாபன், நாகதீபன் தவில் வித்துவான்கள் பிரசன்னா சதீஸ்குமார் சாயித்தியன் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து சிறந்த பக்திக்கான நாத இசை வழங்க இருக்கிறார்கள்.
ஆலய உற்சவ காலங்களில் நாம் கலந்து கொள்வதினால் எமது ஆன்மா இறையருளை அதிகம் உள்வாங்குகிறது. அங்கு ஓதப்படும் மந்திரங்கள், திருமுறைகள், மற்றும் மங்கள இசைகள் மூலமாக ஆன்மா செவி வழியாக ஈடுபடுகிறது.
பிரார்த்தனை
இறைவனின் அலங்காரக் காட்சிகள் மற்றும் தீப ஆராதனை மூலமாக கண் வழியாகவும் பஜனை மற்றும் அரோஹரா போன்ற ஓசை வடிவங்களால் வாக்கு மூலமாகவும் இறையருளை அதிகமாக நாம் பெற்றுக் கொள்கிறோம்.
இதேபோன்று அதிக உன்னதமான திருவிழாவாக தேர்த்திருவிழா நடைபெறும் அவ்வேளை எமது கைகளினால் வடம் பிடிக்கும் நல்ல சந்தர்ப்பத்தை அடைகிறோம்.
இக்காலங்களில் குளிர்மையான பாற்குடம் அக்நி வடிவமாக தீச் சட்டி காற்றின் வடிவமாகக் காவடி போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்கள் செய்வார்கள். இன்னும் சிலர் தூக்குக் காவடி எடுத்தும் பிரார்த்தனை செய்வார்கள்.
இம்முறை 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 மணியளவில் வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று 11.00 மணியளவில் தேர் வலம் நடைபெறும்.
அடியவர்கள் தினமும் நடைபெறுகின்ற நல்லருள் காட்சிகளில் கலந்து ஆன்மீக ஈடேற்றம் காணுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
தர்மப் பணிகள்
இதற்கான சகல ஒத்துழைப்பும் வழங்குகின்ற உபயகாரப் பெருமக்கள் மற்றும் அடியார்கள் அனைவருக்கும் கற்பகபதி கற்பக விநாயகப் பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறோம்.
ஆலயங்கள் பூஜைகள் மட்டுமன்றி சமுதாயச் சேவைகளும் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஆலய தலைவரும் ஸ்தாபகருமாகிய திரு. மு. கோபாலகிருஷ்ணன், தாயகத்தில் பல தர்மப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆலயங்கள் கட்டுவதற்கு நிதி உதவி, ஆதரவற்றவர்களுக்கு நிதி மற்றும் பலவகையான உதவிகள், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல் போன்றவற்றை அவர் செய்து வருகின்றார்.
கிளிநொச்சி, மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை மலையகம் எனப் பரந்துபட்ட இடங்களிலும் தர்மப் பணிகள் செய்வதுடன் அகிலன் பௌண்டேசன் மூலமாகவும் பல நிலைகளில் உதவி வருகிறார்.
இந்த வகையில் ஆன்மீகச் செழிப்பும் சமூக நன்மைகளும் இளையோர், மூத்தோர் அமைப்புகளின் நாட்டமும் ஒன்று சேரும் நல்ல தலமாகவும் இந்த ஆலயம் வளர்ந்து வருகிறது.
Free Parking,
Monoux college,
190 Chingford Road,
London E 17 5 AA.






