யாழ்.வடமராட்சியில் ஊடகவியலாளர் மற்றும் சமாச தலைவரை அச்சுறுத்திய கரவலை சம்மாட்டி
யாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரை கரை வலை சம்மாட்டி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடு முழுவதும் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்துடன் இணைந்து நாரா நிறுவனம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன்போது மனித வலு, மற்றும் உழவியந்திரம் கொண்டு கரைவலை மீன்பிடி மேற்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அச்சுறுத்தல்
குறித்த ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற வடமராட்சி கிழக்கு சுயாதீன ஊடகவியலாளர் மரியசீலன்-திலைக்ஸ் மற்றும் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோருக்கு சுண்டிக்குளத்தில் கரைவலை தொழில் செய்யும் சம்மாட்டி ஒருவரால் கடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

கரைவலை தொடர்பான எதிர்மறையான செய்திகளை பிரசுரிப்பதையும் அதேபோன்று கரைவலை தொடர்பான பிரச்சினைகளில் தலையிடுவதையும் நிறுத்துமாறு குறித்த சம்மாட்டியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆய்வு
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத உழவியந்திரத்தை பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுவதால் அதிகளவான சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் உழவியந்திரத்தை பாவித்து கரவலை கடற்றொழிலில் ஈடுபட அனுமதி கொடுக்க வேண்டாம் என்று சமாச தலைவர் தங்க ரூபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் ஆய்விற்கு முதல் நாள் ஆய்வு செய்யப்படவுள்ள இடங்களில் காணப்படும் உழவியந்திரங்களால் ஏற்பட்ட மண்ணரிப்பை கரைவலை தொழிலாளர்கள் மண் கொண்டு நிரப்பியதாக தெரிவித்தார்.

