பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் விவகாரத்தில் மகிந்த, நாமல் ஆகியோரின் பெயரை குறிப்பிடுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் கபில சந்திரசேனவுக்கு கடும் அழுத்தம் பிரயோகித்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து ( 08) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
பிடியாணையின் பின்னணி
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த மோசடி தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பின்னணியில், கபில சந்திரசேன நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார்.

இந்த விடயம் குறித்து கொழும்பில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எயார்பஸ் விமான கொள்வனவு குறித்து கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சத்தியகடதாசி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. இது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றி முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
கபில சந்திரசேன தற்கொலை செய்துக் கொண்டாராயின் அதற்கு அவரை தூண்டியது யார்? உளவியல் ரீதியில் அவருக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தது யார் என்பதை ஆராய வேண்டும்.
கபில சந்திரசேனவிற்கு உளவியல் ரீதியில் கடும் அழுத்தம்
எயார் பஸ் கொள்வனவு விவகாரத்தில் 2020.02.13 ஆம் திகதியன்று கபில சந்திரசேனவும், அவரது மனைவியும் முதன் முறையாக கைது செய்யப்பட்டு 2 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டார்கள்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் கைது செய்யப்பட்ட கபில சந்திரசேன உளவியல் ரீதியில் கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் போது ' மகிந்த மற்றும் நாமல் இந்த மோசடியுடன் தொடர்பு என்று கூற வேண்டும். இல்லையேல் கெஹலிய ரம்புக்வெல்லவின் வழக்கின் சாட்சியாளர் தூக்கில் தொங்கியதை போன்று தொங்க நேரிடும்' என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அழுத்தம் பிரயோகித்ததாக கபில சந்திரசேன நீதிமன்றத்துக்கு சத்தியகடதாசி சமர்ப்பித்துள்ளார்.
சத்தியகடதாசி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மக்களின் வரிப்பணத்தில் தான் செயற்படுகிறது.
ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விருப்பு, வெறுப்புக்கு அமைய ஆணைக்குழு செயற்பட கூடாது. எமது ஆட்சியில் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
you may like this
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan