இலங்கையில் கொடூர செயலில் ஈடுபடும் ஆபத்தான நபர்! திணறும் இன்டர்போல்
பிரபல பாதாள உலகக் குழு தலைவரான கஞ்சிபானி இம்ரான், சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் கண்களில் மண்ணைத்தூவி தொடர்ந்தும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் கொலைகள் மற்றும் கொடூரமான மனிதநேயமற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, இலங்கையின் பாதாள உலகக் குழுவின் மிகக் கொடூரமான மற்றும் ஆபத்தான குற்றவாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸாரின் வலையிலிருந்தும் தப்பித்து, வெளிநாடு ஒன்றில் தலைமறைவாக இருந்து கொண்டு, இலங்கையில் அச்சுறுத்தலான பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை இயக்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முக்கிய சூத்திரதாரி
2019ஆம் ஆண்டு துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதன் பின்னர், அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சிபானி இம்ரான், 2021ஆம் ஆண்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடினார்.
அன்றிலிருந்து போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளின் எல்லைகளைக் கடந்து நடமாடி வரும் கஞ்சிபானி இம்ரான், பல கொடூரமான கொலைகளின் பின்னணியில் இருக்கும் முக்கிய சூத்திரதாரியாக விளங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
'கஞ்சிபானி இம்ரான்' வெறும் உள்நாட்டு பாதாள உலக குழு செயற்பாடுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை எனவும், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பாரிய மாஃபியா கும்பல்களுடன் கைகோர்த்துள்ளதாக புலனாய்வுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளை சர்வதேச தொழில்நுட்பங்கள் மற்றும் தொடர்புகளைப் பயன்படுத்தி இயக்கி வரும் கஞ்சிபானி இம்ரானினால் நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் சாதாரணமானதொன்றல்ல என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார், சர்வதேச பொலிஸ் ஊடாக 2024 ஆகஸ்ட் 02 அன்று 'A-888' என்ற இலக்கத்தின் கீழ் 'சிவப்பு அறிவித்தல்' (Red Notice) ஒன்றைப் பிறப்பித்துள்ளனர்.
எனினும், தொடர்ச்சியாகத் தனது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு, பாதுகாப்புப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவி தலைமறைவாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு கொடூரமான குற்றவாளி சுதந்திரமாக நடமாடுவது தேசியப் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாகும் எனவும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் இருந்தால் குற்றப் புலனாய்வு பிரிவு அல்லது இன்டர்போலிற்கோ தகவல் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கைதியின் கோரிக்கையால் ஏற்பட்ட விபரீதம்! மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்படும் சிசிடிவி காட்சிகள்
you may like this video