திருகோணமலையில் ஆறாவது நாளாக தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் போராட்டம்
திருகோணமலை - புல்மோட்டை பகுதியில், கனிப்பொருள் மணல் நிறுவனத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை விரட்ட வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை முன்வைத்து கூட்டுத்தாபன ஊழியர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம், ஆறாவது நாளாக இன்று(31.12.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் கோரிக்கை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தொழிற்சங்கங்கள் ஊடாக பல கோரிக்கைகளை முன்வைத்தும் அதற்கான எந்தவித நடவடிக்கைகளும் இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை எனவும், அதற்குப் பதிலாக அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிறுவனத்திலுள்ள ஒவ்வொரு மண்ணிலும் தொழிலாளர்களின் வியர்வை உள்ளது. இந்த மண்ணை விற்பனை செய்கின்ற சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் இருக்கின்ற பிழை காரணமாகவும், சதி திட்டம் காரணமாகவும், விற்பனை நஷ்டத்தைக் காட்டி, நிறுவனத்தை நஷ்டம் அடையும் நிறுவனமாக காட்டி, தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் குறித்த போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தேர்தல் காலங்களின் போது எதிர்காலத்தில் இந்த கூட்டுத்தாபனத்தின் ஊடாக முழு நாடையும் கரை சேர்க்க முடியும் என கூறிய அமைச்சர் ஏன் தற்போது கவனிப்பாரற்ற நிலையில் இருக்கின்றார் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஆறாவது நாளாக இன்று முன்னெடுப்பு
குறித்த போராட்டத்தில், 600ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.

புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கனிப்பொருள் மணல் நிறுவனத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளை விரட்டுங்கள், தனியாருக்கு விற்க வேண்டாம், குறைந்த விலையில் மண் விற்பதை உடனடியாக நிறுத்தி எங்கள் நிறுவனத்தை விற்காமல் காப்பாற்றுங்கள் போன்ற கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று(31) திகதி அன்றும் ஆறாவது நாளாக முன்னெடுத்துள்ளனர்.
மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுப்படும் என்றும் தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
