தென்னிலங்கையில் வர்த்தகரை படுகொலை செய்ய நுணுக்கமான திட்டம்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
களுத்துறை - வெட்டுமகடை பகுதியில் ஹஜ் பெருநாள் அன்று, வர்த்தகர் ஒருவர் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
களுத்துறை தெற்கு, மரிக்கார் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய முகமது இஷாம் அபிரீத் என்ற வியாபாரியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் (27) காலை வெட்டுமகடை பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு, வியாபார நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது இப்படுகொலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் விசாரணைகளில், இது தனிப்பட்ட விரோதம் மற்றும் ஒரு நிதி ஒப்பந்தம் காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் விவகாரம்..
உயிரிழந்த வர்த்தகருக்கும் அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த காதல் விவகாரமே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

வர்த்தகர், களுத்துறை பகுதியில் பாதாள உலக நபர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்படும் நவீன் என்பவரின் நெருங்கிய கூட்டாளி என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு முன்பும் பலமுறை அவர் கொலை மிரட்டல்களுக்குள்ளாகி இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கொலைக்கு முந்தைய நாள் இரவு (27ஆம் திகதி) சந்தேகநபர்கள் சென்ற வாகனம், களுத்துறை, ஹீனதியங்கலாவில் உள்ள வர்த்தகரின் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இந்தக் குற்றத்திற்காக ஒரு நுணுக்கமான திட்டத்தைத் தீட்டியியுள்ளனர். அவர்கள் வந்த வாகனங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்திய உத்தியே இதற்குச் சான்று என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
படுகொலையின் திட்டம்..
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முதலில் ஒரு வெள்ளை மினி வானில் வந்து, பின்னர் ஒரு காருக்கு மாறி தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவத்திற்கு பிறகு சந்தேகநபர்கள் தப்பி ஓடிய நிலையில், அஞ்சல் அலுவலகம் ஒன்றின் அருகே, சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், பின்பக்கக் கண்ணாடியில் ஒரு வெள்ளை ஸ்டிக்கருடன் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

சந்தேகநபர்கள் சென்ற வானும் களுத்துறை - மத்துகம சாலையில் உள்ள டொடங்கொட அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் அருகே கைவிடப்பட்டிருந்தது.
இந்தக் கார் களனியில் உள்ள சப்புகஸ்கந்த பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலை ஒரு சாதாரண குடும்பத் தகராறில் நடந்ததா அல்லது இறந்த வர்த்தகர், பொலிஸாருக்கு தகவல் அளிப்பவராகச் செயல்படுகிறார் என்ற சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்டதா என்பது இன்னும் சந்தேகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வரை, இந்தத் தாக்குதல் தொடர்பாக எந்த சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய முடியவில்லை. மேலும், சம்பவ இடத்தின் சிசிரிவி காட்சிகள் மற்றும் வாகனங்களில் கண்டெடுக்கப்பட்ட கைரேகைகளைக் கொண்டு விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri