கசிந்துள்ள தொலைபேசி உரையாடல்! கடுவலை மேயர் மறுப்பு
தொலைபேசி உரையாடலின் போது தாம் கொலைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கடுவெல மேயரும் முன்னாள் இலங்கை மின்சார சபை தொழிற்சங்கத் தலைவருமான ரஞ்சன் ஜெயலால் மறுத்துள்ளார்.
அத்துடன் இந்த தொலைபேசி உரையாடல், பல்வேறு சூழலில் இருந்து எடுக்கப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியான ஒலிப்பதிவு
தற்போதைய மறுசீரமைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஜெயலாலுக்கும் தொழிற்சங்க உறுப்பினர் ஒருவருக்கும் இடையே நடந்த சூடான வாக்குவாதத்தின் ஒலிப்பதிவை மின்சாரத்துறையின் தேசிய ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "கொலை செய்ய பயப்படவில்லை" மற்றும் "ஒரு லட்சம் பேரைக் கொன்றாலும் இந்த நாட்டைக் காப்பாற்றுவோம்" போன்ற சொற்றொடர்களை ஜெயலால் கூறுகிறார்.
இந்தக் கருத்துகளுக்கு மின்சாரசபையின் தேசிய ஊழியர் சங்கச் செயலாளர் அஜித் தேவப்ரிய கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடுவலை மேயர் மறுப்பு
ஒரு காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட ஒரு தலைவரிடமிருந்து இதுபோன்ற மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் சர்ச்சைக்கு பதிலளித்த ஜெயலால், தான் யாரையும் கொலை செய்வதாக மிரட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தான் இறக்கவோ அல்லது அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவோ பயப்படவில்லை என்று கூறிய நிலையில், அது, சில ஊடகங்களால் திரிபுப்படுத்தப்பட்டு, தான் வன்முறைக்கு அழைப்பு விடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது என்று ஜெயலால் தெரிவித்துள்ளார்.



