கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பம் (video)
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 3 ஆம்,4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இவ் திருவிழாவுக்கு இந்திய, இலங்கை ஆகிய நாட்டுகளில் இருந்து 8,000 பக்தர்கள் வருகை தருவதற்கான அனுமதி வழங்கப்படயிருக்கின்றன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ்ப்பாணம் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இம்முறை திருவிழா நடைபெறவுள்ளது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரையில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்வரும் 3 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி முதல் முற்பகல் 10 மணி வரை குறிக்கட்டுவான் வரை அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அத்துடன், அதிகாலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை குறிக்கட்டுவான் முதல் கச்சதீவுக்கான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இதற்கான தனி ஒருவருக்கு இருவழிபயணமாக 2,000 ரூபாவும், நெடுந்தீவில் இருந்து செல்பவர்களுக்கு 1500 ரூபாவும் படகுச்சேவைக்கான கட்டணமாக காணப்படுகின்றது. இவை படகு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலமாக இவ் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாவட்டங்களிலிருந்து தங்களது சொந்த படகுகளில் வருகை தருபவர்கள், வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள கடற்படை முகாமில் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு, 3 ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன்னதாக கச்சதீவைவந்தடையும் வகையில் பயணத்தை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
கச்சதீவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு காலை உணவைக் கடற்படையினர் வழங்கவுள்ளதோடு, மது பாவனைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவை மீறி மதுபானங்களைக் கொண்டு செல்லும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் நலன் கருதி ஒரு வாரத்திற்கு முன்பு மலேரியா நுளம்பு தாக்கம் இல்லாது ஒழிக்க சுகாதார திணைக்கள வைத்திய அதிகாரிகள் விஜயம் செய்து புகையூட்டல் செய்தும் வந்துள்ளனர்.
மேலதிக தகவல்-கஜிந்தன்