தென்னிந்திய தமிழ் தொலைகாட்சி துறையின் மூத்த ஆளுமை கே.எஸ்.ஸ்ரீராம் காலமானார்
ஐ.பி.சி தமிழின் தென்னிந்திய கலையகத்தின் பணிப்பாளரும் விஜய் டிவியின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கே.எஸ்.ஸ்ரீராம் (K.Sriram) இயற்கை எய்தியுள்ளார்.
இன்று (20) காலை மாரடைப்பு காரணமாக காவேரி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறைவனடி சேர்ந்துள்ளார்.
ஸ்ரீராம் கடைசியாக கலைஞர் டிவி நெட்வேர்க்கில் வணிக ஆலோசகராகப் பணியாற்றியதுடன் அவர் ஒரு பக்தி அலைவரிசையைத் தொடங்கவும் திட்டமிட்டிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய ஊடகங்கள்
16 ஆண்டுகளாக விஜய் டிவியில் பணியாற்றிய ஸ்ரீராம் உள்ளடக்கம் மற்றும் வருமான உத்தியை வழிநடத்தினார்.
அத்துடன் இந்து மதம், பஜனைகள் மற்றும் மதச் சொற்பொழிவுகளை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் மூலம் இந்திய கலாச்சாரம் மற்றும் மரபுகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்டு வரும் ஸ்ரீ சங்கரா டிவியின் நிர்வாக இயக்குநராகவும் கே.எஸ்.ஸ்ரீராம் பணியாற்றினார்.
ஸ்ரீராம் அவரது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில் இன்று இவ்வுலகை விட்டு நீங்கியுள்ளார்.
கே. ஸ்ரீராமின் திடீர் மறைவைத் தொடர்ந்து, தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்புத் துறையினர் ஆழ்ந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர் இந்த நிலையில் அன்னாரின் மறைவிற்கு ஐபிசி தமிழ் குடும்பம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.