ஜே.வி.பியே பாதாள உலக குழுக்கள் உருவாக காரணம்-சுதந்திரக்கட்சி குற்றச்சாட்டு
மக்கள் விடுதலை முன்னணி கடந்த 1971 ஆம் ஆண்டு மற்றும் 1989 மற்றும் 90 ஆம் ஆ ஆண்டுகளில் மேற்கொண்ட கொடூரமான செயல்களுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவ்வாறான பயங்கரவாத செயல்களில் மீண்டும் ஈடுபடுவதில்லை என்று நாட்டுக்கு உறுதி வழங்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் பயங்கரவாதத்தால் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்
பயங்கரவாதம் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் மேற்கொண்ட தவறு காரணமாக இளைஞர்கள் மற்றும் சாதாரண மக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி 70 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் 80 ஆம் ஆண்டுகளின் இறுதியில் மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
80 ஆம் ஆண்டுகளின் இறுதியில் மாத்திரம் சுமார் 60 ஆயிரம் இளைஞர்,யுவதிகளை மக்கள் விடுதலை முன்னணியினரும் பாதுகாப்பு படையினரும் கொடூரமாக கொலை செய்தனர்.
வேறு அரசியல் கட்சியின் உறுப்பினர் மற்றும் பாதுகாப்பு படைகளில் கடமையாற்றியதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணியினர் இளைஞர்களையும் அப்பாவி பொது மக்களையும் கொலை செய்தனர்.
விஜய குமாரதுங்க உட்பட கலைஞர்களையும் கொலை செய்தனர்
இந்த சம்பவங்கள் தற்போது மக்களின் மனங்களில் இருக்கின்றன. பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்க போன்ற கலைஞர்கள், ஊடகவியலாளர் பிரேம கீர்த்தி டி அல்விஸ், சாகரிகோ கோமஸ் குருகே ஆகியோரை மக்கள் விடுதலை முன்னணியினர் கொலை செய்தனர்.
அது மாத்திரமல்லாது, புத்திஜீவிகள், பிக்குமார், அரசியல்வாதிகள் ஆகியோர் வேறு அரசியல் கொள்கைகளை கொண்டிருந்ததன் காரணமாக கொலை செய்யப்பட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் மேற்கொண்ட இரண்டு ஆயுத கிளர்ச்சிகளே இலங்கையில் பாதாள உலக குழுக்கள் உருவாக காரணமாக அமைந்தன எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குற்றம் சுமத்தியுள்ளார்.