பலாலி வீதி திறப்பு! அநுரவின் அசிங்கமான அரசியல் என சாடும் சிரேஸ்ட சட்டத்தரணி
அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிட வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்னவேல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் காணாமல்போனோரை தேடியறியும் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மனித புதைகுழி
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,''பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனை அளிக்கிறது.
இது அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி போல தோன்றுகிறது.
இவ்வாறான விடயங்களை செய்ய வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்தும் நான் தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
காரணம்
அந்த வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு சரிபார்ப்பில் ஈடுபடாமல் இந்த வீதியை திறந்துள்ளது. இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வீதியை திறக்கவேண்டும் என்றால் முழுமையான பாதுகாப்பு சரிபார்ப்புக்குப் பின்னரே அதனை திறக்க வேண்டும்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு எந்தவித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் அதனை திறக்க வேண்டும்.
மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளுக்கு இலங்கையில் எந்த அரசாங்கமும் இதுவரை நூறு வீத ஆதரவை வழங்கவில்லை. அரசாங்கங்களிடம் இது தொடர்பாக அரசியல் உறுதிப்பாடும் இல்லை.'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.