தேசபந்து தென்னகோனின் நியமனத்தை மௌனமாக கடந்து சென்ற ஜே.வி.பி!
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது அப்போதைய நாடாளுமன்றில் இருந்த எந்தவொரு ஜே.வி.பி உறுப்பினரும் பதவியை இடைநிறுத்த நீதிமன்றம் செல்லவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அரசாங்கம், அவர் அவ்வாறு செயற்பட காரணமாக இருந்த அரசியல்வாதிகளை பாதுகாத்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவைக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டபோது, அன்று அரசியலமைப்பு பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எமது கட்சியின் கபீர் ஹாசிம் ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி
ஆனால் அன்று இந்த சபையில் மக்கள் விடுதலை முன்னணி 3 உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைத்துவிடயங்களுக்கும் நீதிமன்றம் செல்வார்கள். ஆனால் தேசபந்து தென்னகோனின் பதவியை இடைநிறுத்த நீதிமன்றம் செல்லவில்லை.
ஏன் செல்லவில்லை என்பதை ஜனாதிபதியிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்கிடையில் இருந்து டீலே இதற்கு காரணமாகும். அதேநேரம் தேசபந்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டன.
அவருக்கு எதிரான விசாரணை குழுவின் அறிக்கையில் டபிள்யு 15 தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் மாத்திரமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக இங்கு தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குண்டை, களனிகம வெளியேறும் இடத்தில், பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்ட லொரியை விடுவிப்பதற்கு கட்டளையிட்டவர் தேசபந்து தென்னகோன் என்ற குற்றச்சாட்டு ஏன் தெரிவிக்கப்படவில்லை.
அதேபோன்று இளைஞர்களின் போராட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக அன்று தேசபந்து தென்னகோன் வழக்கு தொடுத்தவர்கள், இன்றும் நீதிமன்றம் செல்கிறார்கள்.
அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன
அரசியல் தீர்மானம் ஒன்று எடுத்து அவர்களை விடுவிக்க அரசாங்கத்துக்கு முடியாமல் போயிருக்கிறது.
அந்த வழக்குகளை மீளபெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
அத்துடன் யுக்திய செயற்பாட்டின்போது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அரசாங்கம் விசாரணை மேற்கொள்கிறதா?
இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? அதனால் அரசாங்கம் குற்றச்சாட்டு உள்ளவர்கள் உயர் பதவிகளுக்கு நியமிக்காத வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்" என்றார்.




