காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கப்பட வேண்டும் : குருசுவாமி சுரேந்திரன்
நீதியான முறையிலே விசாரணை நடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கப்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு அதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம் என ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது பற்றியதான உங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் வினவிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் தம் உறவுகளைத் தேடிப் போராடி வருகிறார்கள். நாங்கள் இதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளதோடு, அந்த உறவுகளுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இதில் அரசாங்கம் மேம்போக்காக மரணச் சான்றிதழ் வழங்குகிறோம், இறந்தவர்களுக்கான, நிவாரணம் வழங்குகிறோம், நிதி உதவி வழங்குகிறோம், என்பதன் மூலம் இதற்கான தீர்வினை அடைந்து விட முடியாது.
அவற்றுக்கும் அப்பால், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.
தங்கள் கண்களின் முன்னால் பாதுகாப்புப் படையிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றவர்களுக்கு, அவர்களுக்கு நடந்தவை குறித்து தெரியப்படுத்தப்படுவதோடு, அதற்கான நீதியான முறையிலே ஒரு விசாரணை நடத்தப்பட்டு உரியவர்களுக்கு, தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம் என்றும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.