துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியாது..! அதிகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விளக்கம்
சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,சிறைச்சாலைகள் அவசரச் சட்டத்தின் கீழ், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளார்.
சிறை வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
இராணுவம் மற்றும் பொலிஸார் தொடர்பில் ஒரு 'கட்டளைத் தொடர்' மூலம் செயல்படுத்தப்படும் துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவுகள் சிறை அமைப்பில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து தனக்கு இன்னும் ஆழமான புரிதல் இல்லை என்றும், அதுகுறித்து தனக்கு மேலதிக தெளிவு தேவைப்படுவதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தாதது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சிறை வளாகத்திற்குள் துப்பாக்கிகளைப் பயன்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
சிறை வளாகத்திற்குள் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.