அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்: சிவஞானம் சிறீதரன்
முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டி இருந்தால் ராஜபக்கக்கள் அறத்தின் வழி நடந்து ஒரு தர்மத்தின் வழியிலான ஒரு அரசியலை நடத்தி இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கண்டாவளை கொம்படி அம்மன் ஆலயத்தின் புகழ்பாடும் கொம்படியம்மன் சிலம்போசை என்ற பாடல் இறுவட்டு வெளியீட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தெடர்ந்து உரையாற்றுகையில்,
மதுரையில் பாண்டிய மன்னன் ஆட்சி செய்தபோது கண்ணகி தன்னுடைய கோவலனுக்காக சென்று நீதி கேட்டாள் மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ என்று தன்னுடைய காற்சிலம்பை எறிந்து நீதியை நிலைநாட்டி உண்மையை வெளிக்கொண்டு வந்ததால் தான் அந்த மரணம் பிழையான வழியிலேயே நடந்தது என்று அந்த உண்மை கண்டறியப்பட்டது.நீதி வழங்கப்பட்டது.
யாருக்காக என்றால் கண்ணகியின் போராட்டத்தால் தான் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இதனையும் சிலப்பதிகாரம் தான் சொல்லுகின்ற கண்ணகியின் வார்த்தை தான் யார் அரசியலில் இருக்கின்றார்களோ அவர்கள் பிழையான ஒரு அரசியலை செய்தால் அவரது வாழ்க்கையில் அவரைத் தண்டிக்கும் அது நானாக இருக்கலாம் அல்லது மதுரை மன்னனாக இருக்கலாம்.
இந்த நாட்டில் அரசியல் செய்யும் யாராக இருந்தாலும் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இதை இன்றைய நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முதல் மகிந்த ராஜபக்ச ஏன் ராஜபக்ச குடும்பத்திற்கே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாக அவர்களுக்கு அது மாறி இருக்கின்றது.
இதனால் இன்று அவர்கள் எங்கே ஓடி ஒலிவது எங்கே தங்குவது என்று தெரியாமல் ஓடி அலைந்து திரிகின்றார்கள். இந்த நாட்களை நாங்கள் பார்க்கின்றோம். உண்மையைக் கண்டறிந்து கண்ணகி நீதியை நிலைநாட்டி எல்லோருக்கும் ஒரு நீதி தேவதை ஆக வைத்து போற்றப்படுகின்றாள்.பத்தினி தெய்வமாக வழிபடுகின்றார்.
அது போல ராஜபக்சக்கள் இந்த முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டி இருந்தால் அவர்களது அரசியல் பிழைக்காமல் அறத்தின் வழி நடந்து ஒரு தர்மத்தின் வழியிலான ஒரு அரசியலை நடத்தி இருக்கலாம்.
ஆனால் அந்த தர்மமும், நீதியும், கருணையையும்,அன்பையும் போதிக்கின்ற புத்த பகவானுடைய மகாவம்ச சிந்தனையில் ஊறித் திளைத்து இருக்கின்ற ராஜபக்ச குடும்பத்தை அல்லது சிங்கள மக்களும் அதிலிருந்து விடுவதில்லை அதிலிருந்து அவர்கள் இன்னும் மீள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.அதனால் தான் இந்த நாடு இவ்வளவு சீரழிகின்றது.
இவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டால் சரியான வழியில் இந்த அரசாங்கம் நடந்து கொண்டால் இந்த பொருளாதாரத்தை மிக இலகுவாக நிமிர்த்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.