செம்மணி புதைகுழிக்கு நீதி கிடைக்க வேண்டும்! தெற்கில் இருந்து ஒலித்த இளைஞரின் குரல்
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தென்னிலங்கையை சேர்ந்த, சிங்கள சமூக செயற்பாட்டாளரான அர்ஜுன தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,''யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் அகழப்படுகின்றன. இதில் சிறுவர்கள், பெரியோர்கள் என கொடூரமாக கொலை செய்யப்பட்ட 34 பேரின் எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்
இந்த பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இந்த விடயம் குறித்து சிங்கள மக்களாகிய நாங்களும் தமிழ் மக்களுடன் இணைந்து ஒன்றாக இருக்கின்றோம்.
யுத்த காலத்தில் ஏராளமானேர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நீண்ட காலமாக அவர்களை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே இந்த புதிய அரசாங்கத்திடம் நாங்கள் கேட்பது என்னவெனில், இதற்கு ஒரு தீர்வினை வழங்குங்கள். புதிய அரசாங்கத்திடம் இருந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தான் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்.''என கூறினார்.