பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் விடுதலை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்ட கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுபிள்ளை கோகிலதாசன் குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று நகர்தல் பத்திரத்தின் மூலம் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி இரட்ணவேல் மற்றும் சட்டத்தரணி ரணித்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சட்டத்தரணி பி.ஜெசிங்கம் முன்னிலையாகியிருந்தார்.
ஊடக அமைப்புக்கள் குரல்
இவர் முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வான மாவீரர் நிகழ்வு தொடர்பான பதிவினை பதிவிட்டமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 28.11.2020 அன்று வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொடர்ந்து ஒரு வருடமும் 5 மாதங்கள் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் 07.03.2022 ஆம் திகதியன்று நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இருந்தபோதிலும் இவரது வழக்கு இன்றைய திகதி வரை நடைபெற்றுள்ளது.
இவரது விடுதலை தொடர்பாக சர்வதேச உள்ளூர் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.