ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் ரமேஸ் மதுசங்கவிற்கு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கம் இந்த ஆண்டும் வழங்கப்படவுள்ளது.
ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ். பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இந்த ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படவுள்ளது.
பட்டமளிப்பு விழா
யாழ். பல்கலைக்கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா 2022 ஐப்பசி மாதம் 06,07,08 ஆம் திகதிகளில் நடைபெறுகின்றது.
நாளை (07.10.2022) இடம்பெறும் அமர்வின் போது யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமை சித்தி பெற்ற மாணவனான புத்தளம் - கொட்டகை கிராமத்தை சேர்ந்த செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
நிலக்சன் படுகொலை
யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாக கல்வி கற்ற அதேவேளை ஊடகவியலாளராக பணியாற்றி கொண்டிருந்த நிலக்சன் 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற 2004ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” அமைப்பு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்பு தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை, அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ். பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகள்
இதற்கமைவாக அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு மொனராகலை - மரகலை தோட்ட கிராமத்தை சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு ஏகாந்த நிலையில் வழங்கப்பட்டது.
தங்கப் பதக்கத்தினை பெறுவது தொடர்பில் மாணவன் செல்வராஜா ரமேஸ் மதுசங்க இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்,
ஊடகத் துறையை சிறப்பு கலையாக தெரிவு செய்யும் போது சிறு அச்சம் என்னில் ஏற்பட்டது. பின் விரிவுரையாளர்களின் கற்பித்தல் நுட்பங்களும், எமக்கான வழிகாட்டல்களை வழங்கி அனுசரித்ததால் விருப்பத்துடன் கற்பதற்கான ஆர்வம் என்னுள் ஏற்பட்டது.
ஊடகத் துறை
தற்போது ஊடகக் கற்கை துறையை சிறப்பு கலையாக கொண்ட பலர் இன்றும் பல ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இதேபோல் நானும் ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருக்கின்றது.
அத்தோடு அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக
வழங்கப்படுகின்ற தங்கப்பதக்கத்தினை எனக்கு வழங்கி கௌரவிக்கும் “நிலா நிதியம்”
குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.