யாழ் வடமராட்சி நெல்லியடி பகுதி ஊடகவியலாளர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி பகுதியை சேர்ந்த பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பத்திரிகை நிறுவனத்தின் ஊடகவியலாளரும், பணிப்பாளருமான சாந்தலிங்கம் வினோதன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பதில் பிரதேச செயலர் சிவசிறியின் முறைப்பாட்டை அடுத்து பருத்தித்துறை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதேச செயலர் தலைமையில் ஒன்றுகூடல்
கைது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வல்லிபுரம் குருக்கட்டு சித்தி விநாயகர் ஆலயத்தில் தனியாரால் பராமரிக்கப்பட்டுவரும் அன்னதான மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் ஒன்றுகூடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதன்போது குறித்த அன்னதான மண்டத்தை பராமரித்துவரும் பத்திரிகையாளரின் தந்தையான சாந்தலிங்கம், குறித்த அன்னதான மண்டபத்தை நாம் பராமரிப்பு வருகின்றோம். நீங்கள் அந்த வகையில் எமக்கு சொல்லாமல் இவ்வாறு கூட்டம் நடாத்தமுடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கூட்டம் நடந்துகொண்டிருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார்.
இதன் காரணமாக பதில் பிரதேச செயலாளர், “நான் பிரதேச செயலாளர். எனக்கு அதிகாரம் உண்டு.” என்று கூறி தனது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறியதால் பருத்தித்துறை பொலிஸார் ஊடகவியலாளரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றில் வழக்கு
இது தொடர்பில் பதில் பிரதேச செயலாளர் சிவசிறியை கருத்து தெரிவிக்கையில்,
இது தனது பிரதேசம். மக்களின் முறைப்பாட்டை அடுத்து தான் அங்கு சென்றேன். குறித்த அன்னதான மண்டபம் தனியாரால் பராமரிக்கப்பட்டாலும் பிரதேச செயலாளர் என்ற அடிப்படையில் தனக்கு எங்கும் செல்ல அதிகாரம் உண்டு.
குறித்த மண்டபம் மக்களின் பணத்தில் கட்டப்பட்டது. இதே வேளை குறித்த ஆலயம் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு ஒன்று உள்ளது” என்றார்.
எனினும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஒருதரப்பிற்கு மட்டும் அறிவித்து குறித்த கூட்டத்தை நடாத்தியதாக ஊடகவியலாளர் தரப்பால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |