ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பள உயர்வு! ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கை
ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகிய பிரச்சினைகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று முன்தினம்(13.05.2026) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
(2025.07.01)இல் இருந்து பதவி உயர்வு முறைமையை மாற்றி பரீட்சை மூலமாக கூறப்பட்ட போதிலும் இதுவரைக்கும் எந்தவித செயல்பாடும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சம்பள முரண்பாடாக மூன்றில் ஒரு பங்கு தான் வழங்கப்பட்டுள்ளது மீதி இரு பங்குகளையும் வழங்க வேண்டும். இது போன்று வலய ரீதியான பிரச்சினைகளும் ஆசிரியர்களுக்கு உண்டு அவற்றையும் தீர்க்க வேண்டும்.

இது தொடர்பில் கடந்த சனிக் கிழமை பிரதமருடன் பேசியுள்ளோம். இதற்கான தீர்வை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் வழங்க வேண்டும்.
அநேகமாக தொழிற் சங்கத் தலைவர்களே இதனுடன் இணைந்த அமைச்சர்களாக உள்ளனர். ஆகவே அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும்.
ஜனநாயக முறையிலான சீர்திருத்தம்
சில இடங்களில் முறையற்ற இடமாற்றம் நடைபெறுகிறது. இடமாற்றம் முறையாக கொள்கைக்கு அமைய இடம் பெறவேண்டும்.
இதனால் பல ஆசிரியர்கள் துன்பங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதிபர் நியமனங்கள் அரசியல் தலையீடு இன்றி வழங்கப்பட வேண்டும்.

பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் நிலவினால் நேர்முகப்பரீட்சை சுற்றரிக்கையின் பிரகாரம் ஜனநாயக ரீதியில் பரீட்சைகள் நடத்தப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
கல்விச் சீர்திருத்தம் முறையாக இடம்பெற வேண்டும் என்பதுடன் அரசாங்கம் ஜனநாயக ரீதியாக செயற்படுவதுடன் மக்களுக்கு சார்பாகவும் அமைய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.