கல்வி முறையில் பல நெருக்கடிகள்! மீண்டும் சிந்திக்க வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் சாடல்
தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களை கொண்டு வருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் இதுவரை முறையான தயார்நிலை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த ஆண்டு முதல் முதலாம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கு புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. எனினும், அதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு
இந்த சீர்திருத்தங்கள் அடுத்த வருடம் கொண்டுவரப்பட்டாலும், 1ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்கான சீர்திருத்தங்கள் எப்படியும் அடுத்த வருடம் வரவுள்ளன. ஆனால், அதற்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடு இன்னும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றது.
இந்த சீர்திருத்தங்கள் தெளிவாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கொண்டுவந்த சீர்திருத்தங்களின் நீட்சியாகவே உள்ளன. நடைமுறைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாகவே இது காணப்படுகின்றது.

அதேபோன்று, இந்த கல்வி சீர்திருத்தங்களுக்காக விசேட கொள்கைக் கட்டமைப்பொன்றை உருவாக்குமாறு கடந்த நாட்களில் ஜனாதிபதி தேசிய கல்வி ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேசிய கல்வி ஆணைக்குழு அதனைத் தயாரித்து முடித்துள்ளதா என்பது எமக்குத் தெரியாது.
எந்தவொரு திட்டமும் இல்லை
அது இன்னும் மக்கள் மத்தியில் வரவுமில்லை, அதுபற்றிப் பேசப்படவுமில்லை. எந்தவொரு திட்டமுமின்றி கடந்த அரசாங்கங்கள் கொண்டுவந்த சீர்திருத்தங்களையே இவர்கள் முன்னெடுத்துச் செல்கின்றனர். அதற்கான எவ்வித தயார் நிலையும் இன்னும் தென்படவில்லை.
இது ஒரு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. தற்போதைய கல்வி முறையில் பல நடைமுறை நெருக்கடிகள் காணப்படுகின்ற நிலையில், பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காத சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாயின் அது குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டும் என்றார்.