உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய எப்ஸ்டீன் வழக்கு.. கோப்புகளில் இலங்கையின் பெயர்
அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணக் காப்பகத்தில், 'இலங்கை' என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள். வசிப்பிட விவரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுகளுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல. மேலும், அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் சரிபார்க்கப்படாத பல தகவல்கள் உள்ளன.
எனவே, இந்த ஆவணங்களில் ஒருவரின் பெயரோ அல்லது நாட்டின் பெயரோ இடம்பெற்றிருப்பதாலேயே அவர்கள் தவறு செய்ததாகக் கருத முடியாது எனவும், சூழலைப் பொறுத்தே அவற்றை வாசிக்க வேண்டும் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது உலகெங்கிலும் உள்ள ஊடக நிறுவனங்கள் எப்ஸ்டீனின் வலைப்பின்னல் குறித்த மேலதிக உண்மைகளைக் கண்டறிய இந்த ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.