பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் 30 லட்சம் ஆவணங்கள் : வெடித்துள்ள சர்ச்சை
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் நிர்வாணப் புகைப்படங்கள் சரியாக மறைக்கப்படாமல் (Redaction) வெளியானதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதனால், சுமார் 100-க்கும் மேற்பட்ட தப்பிப்பிழைத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்கம்
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி பிரிட்டானி ஹென்டர்சன் மற்றும் பிராட் எட்வர்ட்ஸ் ஆகியோர், "அமெரிக்க வரலாற்றிலேயே பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை மீறப்பட்ட மிக மோசமான சம்பவம் இது" என்று சாடியுள்ளனர்.

சில பெண்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும், அவர்களின் வங்கி விவரங்கள் பகிரங்கமாகியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பொதுவெளியில் அறியப்படாத பல பெண்களின் அடையாளங்கள் இதன் மூலம் கசிந்துள்ளன. இந்தத் தவறுக்கு தொழில்நுட்பக் கோளாறு அல்லது மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆவணங்கள் இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியிடப்பட்ட மொத்த ஆவணங்களில் 0.1 சதவீத பக்கங்களில் மட்டுமே இத்தகைய பிழைகள் இருப்பதாகவும், அவற்றைச் சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் நீதித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 30 லட்சம் பக்கங்கள், 1,80,000 புகைப்படங்கள் மற்றும் 2,000 வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 100 பேரின் அடையாளங்கள் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.