மலையக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்: ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை
மலையகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதனை தவிர்த்து அனைவரும் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஊடாகவியலாளர்களின் பிரச்சினை மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான சந்திப்பொன்று நேற்று(18.06.2023) கொட்டகலையில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியில் மேற்கொள்ளும் வேலைத் திட்டம்
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
''கடந்த காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகள் அனைத்தும் அரசியலே முன்னெடுத்தனர். ஆனால் தற்போது இ.தொ.கா தன்னுடைய அரசியல் பாதையில் மாற்றம் செய்துள்ளது.
நீண்ட காலத்துக்குப் பிறகு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சகல ஊடகவியலாளர்களையும் ஒரே நேரத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இது தேர்தலுக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ ஏற்படுத்தப்பட்டுள்ள சந்திப்பு அல்ல. நாம் அரசியல் ரீதியில் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் சரியான முறையில் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹட்டன் பிரதேசத்தில் ஊடக மையம்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி இந்தியா செல்லும் போது நானும் அவருடன் செல்லவுள்ளேன். அப்போது மலையகத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர்பாகவும், மலையகம் 200 வருடங்கள் சம்பந்தமாகவும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடப்படும்.
விரைவில் இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக ஏற்கனவே பூர்த்தி செய்யப்படாமல் உள்ள குடியிருப்புகளை முழுமையாக்கி மக்களிடம் கையளிக்கப்படும். மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்க தேவையான கட்டிட வசதிகள் உள்ளன. அதற்கான வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், மலையகத்தின் அபிவிருத்தி தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சகல தொழிற்சங்கங்கங்களையும் அழைத்துப் பேசி கருத்துகளை பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஹட்டன் பிரதேசத்தில் 'ஊடக மையம்' ஒன்றை அமைத்துக் கொடுக்க, பொருத்தமான இடத்தைத் தெரிவு செய்து கொடுத்தால், தேவையான உபகரண வசதிகளுடன் அமைத்துக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கை - இந்திய ஊடகவியலாளர்களின் பரிமாற்றத் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி ஊடக வளர்ச்சிக்கும், நவீன தொழில் நுட்ப வசதிக்கும் நடவடிக்கை எடுக்குமாறு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
எனவே, ஊடகவியலாளர்கள் தமது சமூகத்தின் நலன் கருதி ஒற்றுமையாகவும், நேர்மையாகவும் ஊடக தர்மத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |