இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்! வெளியான அறிக்கையினால் உரிமையாளர்களுக்கு சிக்கல்
சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கு பல மில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பை ஏற்படுத்திய வாகனங்கள் குறித்த அறிக்கையை ஜப்பான், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழுவின் கோரிக்கையை தொடர்ந்து, ஜப்பானிய போக்குவரத்து அமைச்சு, இலங்கை வெளியுறவு அமைச்சு வழியாக வாகனங்கள் குறித்த வரலாற்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
ஜப்பானில் பதிவுகள் இரத்து
குறித்த வாகனங்கள் தயாரிக்கப்பட்ட திகதி, அவற்றை ஜப்பானில் பயன்படுத்திய உரிமையாளர்கள் மற்றும் ஜப்பானில் செய்யப்பட்ட பதிவுகள் இரத்து செய்யப்பட்டமை உள்ளிட்ட அறிக்கைகளை நாட்டிற்கு வழங்கியுள்ளது.

‘கடந்த காலத்தில், இலங்கை சுங்கத்துறையால் அனுமதி பெறாத 5000-க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2015 முதல் 2019 வரை மட்டும், 178 சொகுசு வாகனங்கள் சட்டவிரோதமாக சுங்கத்துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் தவறான தரவுகள் உள்ளிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
வரி வருவாய் இழப்பு
அந்த வாகனங்கள் மூலமாக மட்டுமே அரசாங்கம் சுமார் 100 பில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இவ்விஷயம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடத்திய விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த வாகனங்கள் குறித்த வரலாறு அறிக்கை ஜப்பானிலிருந்து பெறப்பட்டது,” என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.