தமிழகம் சென்ற யாழ்.இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்: தீவிரமடையும் விசாரணைகள்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்த நிலையில், தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



