யாழ்.குருநகர் பகுதி இளைஞன் கொலை விவகாரம்! நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ் - குருநகர் பகுதி இளைஞனை வாளால் வெட்டி கொலை செய்த பிரதான சந்தேகநபர்களை 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கவும், தொடர்புபட்ட ஏனையோரையும் உடனடியாக கைது செய்யும்படியும் யாழ். நீதவான் பீற்றர்போல் இன்று யாழ். நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழில் கடந்த 22ம் திகதி பட்டப்பகலில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், இளைஞன் ஒருவர் 20க்கும் மேற்பட்ட குழுவினரால் நடுவீதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மேலும் மூவர் இதில் காயமடைந்தனர். இக்கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 20க்கும் மேற்பட்ட நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் பல பகுதிகளிலும் களமிறங்கியிருந்தன.
இதில் குறித்த கொலைக்கு உடந்தையளித்தமை மற்றும் உதவி செய்தமை தொடர்பில் 8 பேர் வரையில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
பிரதான சந்தேக நபர்கள் பலர் தலைமறைவாகியிருந்த நிலையில் யாழைச் சூழ உள்ள தீவுகள் மற்றும் வன்னி மாவட்டங்களிலும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கடந்த திங்கள்கிழமை மாலை சட்டத்தரணி றெமிடியஸ் மூலம் யாழ் சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் சரணடைந்தனர்.
சரணடைந்த 6 சந்தேக நபர்களையும் யாழ் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முற்படுத்தினர்.
இதன்போது பொலிஸார் தமது தடுப்பு காவலில் 48 மணித்தியாலங்கள் சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ள அனுமதி கோரியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதவான் சந்தேகநபர்களை 48 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் சந்தேக நபர்களின் தொலைபேசிகள் உரையாடல் தொடர்பில் பகுப்பாய்வு விசாரணைகளை மேற்கொள்ளும் படியும் மேலும் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட முக்கியசந்தேகநபர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதவானின் உத்தரவிற்கமைய சந்தேக நபர்கள் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளைத் தலைமறைவாகியுள்ள நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
