யாழ். பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! 300 பேர் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறைகளில் தங்கி உள்ள மாணவிகள் பல்கலைக்கழகத்துக்குக் காலையிலும் மாலையிலும் வீதியால் செல்லுகின்ற போது சிலர் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு கடந்த மாதம் 300 மாணவிகளின் கையெழுத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும் மாணவிகள் மீதான தொல்லை தொடர்ந்தமையால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் பின்புற வீதியூடாக விடுதிக்குச் செல்லுகின்ற மற்றும் அந்தப் பகுதியிலுள்ள வாடகை அறைகளுக்கு செல்லும் மாணவிகளையும் இலக்கு வைத்து, அங்கு வரும் இளைஞர்கள் தமது அந்தரங்க உறுப்புக்களைக் காட்டுவதுடன், மிக மோசமான ஆபாச வார்த்தைகளால் வசைபாடுகின்றனர் என்றும் மாணவிகள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸில் உடனடியாக முறைப்பாடு
பல்கலைக்கழகத்துடன் தொடர்புபடாத இளைஞர்களே இவ்வாறான அநாகரிக செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பல்கலைக்கழக மாணவிகள் இருவரை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மோட்டார் சைக்கிளின் இலக்கத்துடன் கோப்பாய் பொலிஸில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கண்காணிப்பு அந்தப் பகுதிகளில்
நேற்று மாலையிலிருந்து பலப்படுத்தப்பட்டுள்ளது.