யாழ்.பல்கலைக்கழக மூன்று மாணவர்களிடம் 5 மணி நேர விசாரணை
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவரிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு சுமார் 5 மணி நேரம் விசாரணை நடாத்தி வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களை விசாரணைக்கு வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் ஊடாக கடந்த 13ஆம் திகதி திகதியிடப்பட்டு , 16ஆம் திகதி காலை 09.30 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், கடிதம் 17ஆம் திகதியே பதிவாளரால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
வாக்கு மூலங்களின் அடிப்படையில்
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு ஏதுவான நேரத்தை அறிவித்து ,அந்நேரத்தில் விசாரணைக்கு வருமாறு பதிவாளருக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு மாணவர்கள் வாக்குமூலம் அளிப்பதற்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில் மாணவர்களிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பதிவு செய்த பொலிஸார் இன்றைய தினம் மூன்று மாணவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில், அவை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மூன்று மாணவர்களை விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் நடாத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam