யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் முகமாலையில் சோதனை!
யாழ். மற்றும் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி, சாரதி
அனுமதிபத்திரங்கள் முகமாலையில் சோதனை செய்யப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார
சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர்
சங்கத்தின் தலைவருமான சி. சிவபரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முகமாலையில் சோதனை
கொழும்பு- யாழ்ப்பாண இரவு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் அனைத்தினதும் வழித்தட அனுமதி பத்திரங்கள், சாரதி அனுமதிபத்திரங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் சோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைதடியில் நேற்றைய தினம் உள்ளூராட்சி அமைச்சில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
எனவே நாளை மறுதினத்தில் இருந்து யாழ்ப்பாண கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுடைய வழித்தட அனுமதிப்பத்திரம் மற்றும் விசேட சாரதி அனுமதிப்பத்திரம் என்பவற்றை தங்களுடன் உடமையில் வைத்திருப்பது மிகவும் அவசியமெனவும் அது தவறும் பட்சத்தில் பொலிஸார் மற்றும் வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் அதிகாரிகளால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பேருந்து வவுனியாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது,
May you like this Video




