கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மோதி பெண் பலி! சாரதியும், உதவியாளரும் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் - ஏ - 9 பிரதான வீதியின் மதவாச்சி நகரில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பாதசாரியான பெண் மீது மோதியதில் சம்பவித்துள்ளது.
சாரதியும் உதவியாளரும் தப்பியோட்டம்
இந்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பெண், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், அவரது அடையாளம் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விபத்து நிகழ்ந்த உடனே, அந்த பேருந்தின் சாரதியும் அவரது உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அவர்களைக் கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.