யாழ் நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்பட்ட பெரும் சிக்கல்: மக்கள் பாதிப்பு (Photos)
யாழ் நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த இரு படகுகள் பழுதடைந்ததன் காரணமாக நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
யாழ் நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்து படகு சேவைகளில் ஈடுபட்டு வந்த குமுதினி படகு மற்றும் நெடுந்தாரகை ஆகிய படகுகள் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக திருத்தியமைக்கப்படாது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடற் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலைமை காணப்படுகின்றது.
யாழ்பாணத்திலிருந்து 45 கிலோ மீற்றர் தொலைவில் தரைத் தொடர்பு கொண்ட புங்குடுதீவு குறிகாட்டு வானிலிருந்து ஏறத்தாள 10கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அமைந்துள்ளதுடன் தற்போது நெடுந்தீவில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500 பேர் வரையில் வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் இப் பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் தொடர்ந்தும் போக்குவரத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
ஆசிரியர்கள், பிரதேச செயலகத்தின் பணியாளர்கள், வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் அனைவருமே இந்தப் படகு மூலம் பயணம் செய்து அந்த மக்களுக்கான சேவையை வழங்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.
நெடுந்தீவுக்கான போக்குவரத்துக்களில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பனவும், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகு பல்வேறுபட்ட படகுச் சேவைகள் இருக்கின்றன.
இதில் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை என்பன இலவசமாக போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் தற்போது குமுதினி படகு முழுமையாக பழுதடைந்த நிலையில் திருத்தப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்ட்டுள்ளது.
தற்போது பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவையில் வடதாரகை மட்டுமே நாளாந்தம் இரண்டு சேவைகளை வழங்கி வருகின்றது அதாவது காலை 7 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் , பின்னர் காலை 8 மணிக்கு குறிகாட்டுவான் இலிருந்து நெடுந்தீவு, பிற்பகல் 03.மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் என நாளொன்றுக்கு இரண்டு சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வடமாகான சபையினால் கடந்த 2017ம் ஆண்டு வழங்கப்பட்டு நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஜந்து வருடத்துக்குள் இயங்கு நிலையை இழந்து கவனிப்பாரற்று நெடுந்தீவு துறைமுகத்தின் ஒருபக்கத்தில் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இந் நிலையில் நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகளை உரியவாறு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.