யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் ஈடுபடுவோர் எதிர்நோக்கும் சிக்கல் (Video)
யாழ். நெடுந்தீவிற்கான கடல் போக்குவரத்து சேவைக்காக ஈடுபடுத்தப்படும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்நமான வடதாரகை படகு பிரயாணம் தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகில் சுற்றுலாப் பயணிகளுக்கே முன்னுரிமையளிக்கப்படுவதால் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், யாழ். நெடுந்தீவுக்கான கடல் போக்குவரத்தில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வடதாரகை மற்றும் குமுதினி ஆகிய படகுகள் இலவச போக்குவரத்து சேவைகளையும், பிரதேசசபைக்கு நெடுந்தாரகை மற்றும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான படகு மற்றும் தனியார் படகுகளும் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.
வடதாரகை படகு மாத்திரமே சேவையில்
இலவச போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குமுதினி படகு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் திருத்த பணிகளுக்காக கொண்டு செல்லப்பட்டதையடுத்து வடதாரகை படகு மாத்திரமே இலவச பயணிகள் பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.
தினமும் காலை 7 மணி மற்றும் 2.30 மணிக்கு நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கும், காலை 8.30 மற்றும் 4 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கும் சேவையில் ஈடுபடுகிறது. அத்துடன் 100 வரையான பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல கடற்படையினரால் அனுமதி வழங்கப்படுகிறது.
அவசர தேவைகளுக்காக செல்வோருக்கு சிரமம்
இவ்வாறான நிலையில் நெடுந்தீவிலிருந்தும் குறிகாட்டுவானிலிருந்தும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு தேவைகள் கருதி பயணித்து வருகின்றனர்.
அத்துடன் நெடுந்தீவு பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றும் 70 வீதமான உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் முதலில் சுற்றுலாப் பயணிகளை வடதாரகை படகில் ஏற்றி விட்டு பின் எஞ்சிய எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஏனைய பயணிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பல்வேறு தேவைகளை கருதி பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பயணிகள் இவ்வாறு குறிகாட்டுவானிலும் நெடுந்தீவிலும் தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை தெரிவிக்கின்றனர்.



அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
