யாழ். பண்ணை சுற்றுவட்ட பகுதியிலுள்ள நாகபூசணி அம்மன் சிலை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (video)
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலை தொடர்பில் யாழ். நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை அவ்விடத்தில் அமைந்துள்ள வீதி வழிகாட்டி பலகையில் யாழ்ப்பாண பொலிஸார் ஒட்டியுள்ளனர்.
யாழ். பண்ணைச் சுற்று வட்டத்தில் திடீரென தோன்றிய நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
நீதிமன்றின் உத்தரவு
இந்நிலையில், நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இலக்கம் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சிலை அகற்றப்படும்
''15 ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரினால் யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஊர்காவற்றுறை வீதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டத்திற்கு புறம்பாக அடையாளந்தெரியாத நபர்கள் மூலம் பார்வதி அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக உடன்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதென அறிக்கை செய்து அந்தச் சிலையினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி சபையின் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன் அல்லது உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் 18.04.2023ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று உத்தரவிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும்'' என இத்தால் அறியத்தருகின்றேன் என்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பன்று உருத்திர சேனா அமைப்பினால் பால் அபிசேகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.
உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.


சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
