இன்று கதவடைப்பு! யாழில் சில பகுதிகள் முடக்கம் - பல பகுதிகளில் இயல்பு நிலை
புதிய இணைப்பு
தமிழரசு கட்சியினால் இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் இன்றைய தினம் பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சாவகச்சேரி நகரில் மரக்கறி சந்தை மற்றும் அதனுடன் இணைந்த கடைத்தொகுதிகள் முற்றாக மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏனைய தேங்காய் சந்தை, பழக்கடை, மீன் சந்தை தொகுதிகள் பகுதியளவில் இயங்கும் நிலையில் ஒரு சில வர்த்தக நிலையங்கள் திறந்திருப்பதுடன் அரச, தனியார் பொதுப் போக்குவரத்தும் சீராக இயங்குகின்றது.
முதலாம் இணைப்பு
வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன.
வடக்கில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக இன்றையதினம் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணம் வழக்கம் போல இயங்குவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடையடைப்புக்கு அழைப்பு
வடக்கில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக இன்றையதினம் வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த போராட்டத்திற்கு அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதற்கு இணையாக பலரும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தை மட்டுப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் நேற்றையதினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்றையதினம் வழக்கம் போல இயங்குவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில பகுதிகளில் வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பருத்தித்துறை
வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பருத்தித்துறையிலுள்ள பகுதிகள் வழமைப் போல இயங்க ஆரம்பித்துள்ளன.
இன்றைய தினம்(18) பருத்தித்துறை மந்திகை நகர்களில் சுமார் 90 வீதமான கடைகள் திறந்துள்ளன.
போக்குவரத்து சேவைகளும் வழமைபோன்று இடம் பெற்றுவருகின்றது.
மந்திகை சந்தை, பருத்தித்துறை சந்தைகளும் வழமைபோன்று இயங்கிவருகின்றன.
அத்தோடு, நெல்லியடி நகரில் ஒரு சில கடைகளை தவிர அனைத்து கடைகளும் திறந்துள்ளது.
வழமைபோன்று அனைத்து, செயற்பாடுகளும் இடம் பெறுகின்றன.
























