யாழ்.மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம்! ஏ9 பிரதான வீதி ஸ்தம்பிதம் (Photos)
யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த போராட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முன்னால் இடம்பெற்றுள்ளது.
இதனால் தற்பொழுது ஏ9 வீதி முடங்கிய நிலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் “இந்திய மீனவர்களை கைது செய்” , “நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது”, “கைது செய்த படகுகளைப் விடக்கூடாது” போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் கட்சி பேதமின்றி பலரும் பங்கேற்று இருந்த நிலையில்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் , செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்த நிலையில், போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வருகை தந்தபோது ஏனையோர் அங்கிருந்து
சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






