யாழ்.மாவட்ட தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் 7 நாட்களும் தனியார்
கல்வி நிலையங்களினால் நடத்தப்படும் கற்றல்/ கற்பித்தல் செயற்பாடுகளை
வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிறுத்துவதற்காக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவங்கள் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கயைம, ஜூலை 1ம் திகதி முதல இந்த தீர்மானத்தினை செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,
1. தனியார் கல்வி நிலையப் பிரதிநிதிகள் மற்றும் வளவாளர்கள் சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளல்.
இச்செயற்பாட்டை பிரதேச செயலக சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள், மத ஸ்தலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பன பெற்றோர்கள் ஒன்று கூடும் இடங்களில் மேற்கொள்ளல் இதற்கு அனைத்து பிரதேச செயலாளர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2. பிள்ளைகளுக்கு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைப்பதற்கும் பெற்றோர் பிள்ளைகளுக்கான பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் பிள்ளைகள் பெற்றோருடன் அதிக நேரத்தை செலவிடக் கூடியதாக 9 ஆம் வகுப்பு வரை இணைப்பாடவிதான (கலை மற்றும் விளையாட்டு) செயற்பாடு தவிர்ந்த பாடத்திட்ட கல்வி செயற்பாட்டில் ஈடுபடும் சகல தனியார் கல்வி நிலையங்கள், பிரத்தியேகக் குழு வகுப்புக்கள், zoom தொழில் நுட்பமூடாக நடாத்தப்படும் வகுப்புக்கள் என்பன ஜூலை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்குவரும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முற்றாகவும் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களிலும் வகுப்புகளை நடாத்துவதை நிறுத்துதல்.
3. தனியார் கல்வி நிறுவனங்கள் சுகாதார வசதிகளைக் கொண்டதாகவும், மாணவர்களது கற்றல் செயற்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் அமைந்திருத்தல் வேண்டும் இதனை சுகாதாரத் திணைக்களம், உள்ளுராட்சி சபைகள் மற்றும் பிரதேச செயலகங்களினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
4. கல்வி செயற்பாட்டில் ஈடுபடும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், பிரத்தியேக குழு வகுப்புக்களை நடாத்துபவர்கள் தங்களுடைய நிறுவனம் சார்ந்த பதிவினை உள்ளுராட்சி சபைகளில் மேற்கொண்டு பிரதேச செயலகங்களிற்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் தங்களது கல்விச் செயற்பாட்டிற்கு மேலதிகமாக 15-30 நிமிடங்களை ஒதுக்கி ஆன்மீகம் மற்றும் சமூக பொது விடயங்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
5. தற்போது கல்விச் செயற்பாட்டில் ஈடுபடும் சகல தனியார் கல்வி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மாவட்டமட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பினை உருவாக்கி தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளை இலகுபடுத்துவதுடன் எதிர்காலத்தில் தமது கருத்துகளையும் கண்காணிப்புக்களையும் இவ் அமைப்பின் பிரதிநிதிகளினூடாக மேற்கொள்ளல்
6. மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மற்றும் எதிர்காலங்களில் இச்செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும். மாவட்ட மற்றும் பிரதேசமட்டங்களில் சுகாதாரத்துறை, காவல்துறை, கல்விசார் துறையினர், மதத்தலைவர்கள், சமூகஆர்வலர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கி குழுக்களை அமைத்தல்.
இக்குழுவின் ஊடாக மாதாந்தம் கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்து பெற்றோர்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன்
மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் ஒழுங்காக நடைபெறுவதை கண்காணிப்பதன் மூலம்
சமூகமாற்றத்தை உருவாக்குதல்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




