யாழ் மாவட்ட வெள்ள அனர்த்த உணவு விநியோகம் தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவித்தல்
புதிய இணைப்பு
யாழ்ப்பாண மாவட்ட வெள்ள அனர்த்த உணவு விநியோகம் தொடர்பாக அரசாங்க அதிபர் முக்கிய அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
1) யாழ்ப்பான மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான சமைத்த உணவு கிராம அலுவலர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மட்டுமே வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேறு எவரும் சமைத்த உணவினை பாதுகாப்பு நிலையங்களில் தங்கி உள்ளவர்களுக்கு வழங்க முடியாது.
பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாக வேறு எவரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவு வழங்க அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் இதனால் தேவையற்ற சமைத்த உணவு விரயங்களை தவிர்த்துக் கொள்ள முடியும்.

2)அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நண்பர்கள் ,உறவினர் வீடுகள் மற்றும் தங்களுடைய வீடுகளில் இருப்பவர்கள் தங்களுக்குரிய சமைத்த உணவு தேவையினை கிராம அலுவலரிடம் தெரிவிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உலர்உணவு நிவாரணத்தை இனிவரும் காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
3)உணவு அல்லாத பொருட்களை அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூக மட்ட நிறுவனங்கள் மாவட்டச் செயலகத்திற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பிரதேச செயலாளர்களின் கோரிக்கை மற்றும் தேவையின் அடிப்படையில் பங்கீடு செய்யப்பட்டு வழங்க முடியும்.
4)சிறிய அளவில் அல்லது குறைந்த எண்ணிக்கையில் உணவு அல்லாத பொருட்களை தாங்கள் நேரடியாக பாதுகாப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கும் ஏனைய பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கலாம்.
பாதுகாப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவல்லாத பொருட்களின் பதிவுகள் கிராம அலுவலரால் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு நிலையங்களுக்கு வெளியில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவல்லாத பொருட்களின் விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் கிராம அலுவலர் /பிரதேச செயலருக்கு தெரிவிப்பதன் மூலம் பிரதேச செயலக ரீதியாக, பேணப்படும் பொருட்பதிவிற்குள் உட்படுத்தப்படும்.
இத்தகைய விபரங்களை கிராமலுவலரிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் பதிவுக்குட்படுத்தாத போது பிரதேச மட்ட பதிவுக்குள் உட்படுத்தப்பட முடியாத நிலைமை ஏற்படும்.
5) இந் நடைமுறைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் ,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பின்பற்றுவதன் மூலம் உணவுப்பொருட்களின் வீண் விரயங்களை தவிர்த்துக் கொள்வதோடு பாதிக்கப்பட்ட அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் பொருட்களை தேவை அடிப்படையில் பங்கீடு செய்யப்படுவதோடு வழங்கப்பட்ட பொருட்களுக்கான பதிவுகள் உரிய முறையில் பேணப்படும் என்பதனை அறியத் தருவதோடு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
செய்தி - தீபன்

இரண்டாம் இணைப்பு
அனர்த்த நிலமைகள் தொடர்பான கலந்துரையாடல்
அனர்த்த நிலமைகள் தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடல் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (01.12.2025) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரம் அவர்கள்,
பாதிக்கப்பட்டுள்ள இந் நேரத்தில் கட்சி, இன மத பேதமின்றி நாட்டைக் மீள கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இக்கட்டான நேரத்தில் சனாதிபதி அவர்களின் வழிகாட்டுதல்களில் அரசாங்கம் துரிதமாக செயற்பட்டுவருவதாகவும், அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்கிவருவதற்கு தமது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.
மேன்மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவிரும்பினால் ஒரு பகுதிக்கு என்றில்லாமல் அனைத்து பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் கிடைக்கும் வண்ணம் பதிவுகளுடன் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பினால், மாவட்ட செயலகத்தில் பொருட்களை கையேற்கும் கரும்பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பொறுப்பாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (01.12.2025) நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலேயே இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனர்த்த நிவாரணம் மேற்கொள்ள வழங்க முன்வருவோர் தாம் வழங்கவிருக்கும் பொருட்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் பொருட்கள் தொடர்பான விபரங்களையும் குறிப்பிட்டு குறித்த மாவட்ட செயலக கருமபீடத்தில் ஒப்படைக்கலாம்.
உரிய பதிவுகளுடன் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்தார்.
செய்தி - கஜிந்தன்