யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கலந்துரையாடல் (Photos)
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நேற்று (20.09.2022) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வைத்தியசாலையில் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றமையால் இதனை பொலிஸார், பெற்றோர் மற்றும் சமூகத்தில் உள்ளவர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை
அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களிடையே குறித்த போதைப்பொருள் பாவனை அதிகம் காணப்படுவதால் பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மாணவர் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் பாடசாலைகள் ஊடாக பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருளால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சிகிச்சையளிப்பதற்கு பல இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.
மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
வைத்தியசாலையில் மருந்துக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதால் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்படுபவர்களை வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை விட போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.