யாழ்ப்பாணம் - கொழுப்பு பேருந்து சேவையில் அசெளகரியத்திற்குள்ளாகும் பயணிகள்
யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்து சேவையில் வவுனியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையினர் தலையீடுகளைச் செய்து பயணிகளை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபை வவுனியா டிப்போவினால் கொழும்பு - யாழ்ப்பாணம் என நிகழ் நிலையில்(online) தினமும் மாலை 4.00 மணிக்குரிய பேருந்திற்கான இருக்கை முன்பதிவு மேற்கொள்ளப்படுகின்றன.
நிகழ் நிலை இருக்கை முன் பதிவுகள் வேலைச் சிரமத்தை குறைத்து திட்டமிட்ட முறையில் பயண ஒழுங்குகளை செய்துகொள்ள உதவுகின்றன.
எனினும் இந்த நிகழ்நிலைப் பதிவில் குறிப்பிட்டது போல் செயற்பட்டுக் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
மாறுபடும் பெயர்ப்பலகை
பேருந்தின் முன்பாக உள்ள பெயர்ப் பலகையில் கொழும்பு - யாழ்ப்பாணம் என்றும் அதே பேருந்தின் பின்னால் உள்ள பெயர்ப் பலகையில் கொழும்பு - வவுனியா என்றும் பெயர்ப்பலகையோடு சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றது.
“யாழ்ப்பாணம் - கொழும்பு என்று அந்த பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் புறப்பட்ட போது வவுனியா வரை செல்லும். சில நேரங்களில் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு மற்றொரு பேருந்தில் பயணிக்க வேண்டும் என சொல்லப்படும். இந்த அனுபவத்தினை மூன்றாவது தடவையாக அனுபவப்பட்டேன்” என பயணியொருவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
யாழ் செல்லும் பேருந்து என ஏறினால் வவுனியா வரை மட்டுமே செல்வதாக பற்றுச்சீட்டு தரப்படுகிறது. பலர் தினமும் இதனால் ஏமாறுகிறார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயண அனுபவம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த குறித்த பயணி,
“நான் கடந்த 7ஆம் திகதி பயணம் மேற்கொள்ள நிகழ் நிலையில் பதிவுசெய்து வந்தால் நடத்துநர் வவுனியா வரை செல்லும் அங்கு வேறு பேருந்தில் ஏற்றி விடுவதாக கூறி அவ்வாறே செய்தும் தந்தார்.
ஆனால் நாம் ஏமாற்றப்படுகிறோம். கொழும்பிலிருந்து புறப்படும் குறித்த பேருந்து வவுனியா வரையுமே பயணம் செய்வதானால் அவ்வாறே பதிவுகளை செய்யலாம் அல்லவா?
ஏன் பயணிகளை ஏமாற்ற வேண்டும்?” என அசௌகரியத்தினைக் குறிப்பிட்டிருந்தார்.
தொலைதூர பயணமோ, குறுந்தூர பயணமோ பயணியின் விருப்பத்திற்கேற்ப அது இருக்க வேண்டும்.
அது விடுத்து கொழும்பு யாழ்ப்பாணம் என்று நிகழ்நிலையில் பதிவுகளை மேற்கொண்டு விட்டு அவ்வாறு மேற்கொள்ளும் போது இரு பேருந்துகளில் மாறி பயணிக்கும் பயணமாக இது இருக்கும் என எந்தவொரு இடத்திலும் குறிப்பிடாது இருந்து விட்டு பயணிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது பொருத்தமற்ற நடவடிக்கையாக அமையும்.
பயணத்தை ஆரம்பிக்கும் போது கொழும்பில் இருந்து வவுனியா வரை ஒரு பேருந்தும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை மற்றொரு பேருந்துமாக பயணத்தினை பேருந்துசாலைகள் பயணிகளின் விருப்பத்திற்கு மாறாக ஏற்பாடு செய்து கொடுப்பது பொருத்தமற்றதாகும்.
இது ஒருவருடைய தனிமனித சுதந்திரத்தினை மீறுவதாக அமைவதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
மாகாண மட்டத்தில் நடவடிக்கை
பயணிகளை இவ்வாறு நடத்தப்படும் இந்த பயண ஏற்பாடுகளில் அரச பேருந்துகள் ஈடுபடுகின்றன என்பது கவலைக்குரிய விடயமாகும்.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் வவுனியா பேருந்துசாலையின் இந்த செயற்பாட்டிற்கு இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள்; நடவடிக்கைகளை முன்னெடுத்து சரிசெய்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயணிகள் ஏமாற்றப்படுவதாகவே இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை.
குறித்த அரச பேருந்தில் இங்கு குறிப்பிட்ட ஏமாற்றும் செயற்பாட்டை தான் எதிர் கொண்டதாக பயணியொருவர் குற்றச்சாட்டை முன்வைப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்தும் பயணிகளுக்கு இச் செயற்பாடு அசௌகரியத்தினை ஏற்படுத்துவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மாகாண மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முனைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |