யாழ்.பல்கலையில் இருந்து விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணி (Photos)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து "ஆரோக்கியத்தின் பாதையில்" என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப்
பேரணியொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். ஆரோக்கிய நகர திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட "ஆரோக்கியத்தின்
பாதையில்" என்ற விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணி இன்று(1) காலை 7
மணியளவில் ஆரம்பித்து காலை 8 மணியளவில் நிறைவடைந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பேரணி அங்கிருந்து ஆடியபாதம் வீதி வழியாகக் கொக்குவில் சந்தியை அடைந்து, அங்கிருந்து கே.கே.எஸ் வீதி வழியாக ஆஸ்பத்திரி வீதியை அடைந்து, அவ் வீதி வழியாக வேம்படி சந்தியை வந்தடைந்துள்ளது.
பின்னர் அங்கிருந்து பலாலி வீதி ஊடாகப் பரமேஸ்வரா சந்தியை அடைந்து, யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்தின் நுழைவாயிலில் நிறைவடைந்துள்ளது.
அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரமுள்ள இந்த விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டிப் பேரணியில் யாழ். பல்கலை துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா, மருத்துவபீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன், பல்கலைக்கழகப் பணியாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வு திட்டம்
இதன்படி, பொதுமக்களிடையேயான சுகநலனில் அக்கறை கொள்ளலில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் இப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“யாழ் ஆரோக்கிய நகரம்” என்ற செயற்திட்டத்தின் கீழ் இந்த விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் உலக வங்கி “ஆரோக்கிய நகரங்கள்” என்ற எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தி கணிசமான ஆரோக்கிய நகரங்களை அடையாளப்படுத்தியும் உள்ளது.
முதன் முறையாக யாழ்.நகரம் தெரிவு
அந்த அடிப்படையில் தென்னாசியாவிலேயே முதன் முறையாக யாழ். நகரம் தெரிவு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்
துறையின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் உலக சுகாதார
ஸ்தாபனம் உட்பட பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்தின் பங்காளிகளாக தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.