கட்டுவன் மயிலிட்டி வீதி விடுவிப்பு தொடர்பில் கட்டுவன் நில உரிமையாளர்களில் ஒருவர் வெளியிட்ட தகவல் (PHOTOS)
வடக்கு மாகாணத்திற்கு வருமானம் வந்து விடக்கூடாது என்பதற்காகவே மூடிவைக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு செல்வதற்கென்ற போர்வையில் மக்களின் நிலத்தை அபகரித்து பாதை ஏற்படுத்துவதாக கட்டுவன் நில உரிமையாளர்களில் ஒருவரான ந.லோகதயாளன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்பட்ட 400 மீற்றர் வீதியை பார்வையிடும் களவிஜயமொன்றை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் மேற்கொண்டார்.
இதன்போது, "பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்பச்செயற்பாடாக இவ்வீதி
விடுவிப்பை கருதவேண்டியது அவசியமானதாகும் என அங்கஜன் இராமநாதன்
தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், பொது மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப செயற்பாடாக இவ்வீதி விடுவிப்பை கருதவேண்டியது அவசியமானது எனத் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கட்டுவன் நில உரிமையாளர்களில் ஒருவரான ந.லோகதயாளன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
1990ஆம் ஆண்டு முதல்படை வசமிருந்த நிலம் நீண்ட முயற்சியின் பின்பு நல்லாட்சி அரசில் பாதி நிலம் விடுவிக்கப்பட்டு மீதி நிலம் கண் பார்வையில் இருக்க இவ்வாறு கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் மீட்க பல முயற்சிகளை மேற்கொண்டோம்.
இருப்பினும் இந்த சர்வாதிகார ஆட்சியில் எமது நிலத்தின் ஊடாக நெஞ்சில் ஏறி மிதிப்பது போன்று படையினரின் உதவியுடன் வீதி அமைக்கப்படுகின்றது. கட்டுவன் மயிலிட்டி வீதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி. ஆனால் எமது நிலத்தின் ஊடாக படையினரைக் கொண்டு சட்ட விரோதமாக சட்டப்படி எதனையும் பின்பற்றாமல் அமைக்கும் இந்த வீதி அகற்றப்பட்டே ஆக வேண்டும்.
இல்லையேல் இந்த வீதி திறப்பு விழாவிற்கு இடையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இதே வீதியில் ஜனநாயக வழியில் நடாத்துவதோடு சட்டப்படி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வோம். அரசியல் வழியிலும் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்போம்.
இவற்றை மீறி தார் படுக்கை வீதி அமைத்தல் எப்போதும் அந்த வீதியை பெற்றோல் ஊற்றி ரயர் போட்டு கொழுத்தவும் தயங்க மாட்டோம் ஏனெனில் இந்த அரசோ அல்லது வீதி அபிவிருத்தி அதிகார சபையோ சட்டத்தையும் பின்பற்றவில்லை, ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை என்றார்.